தஞ்சாவூர்: ஒரே நேரத்தில் அக்கா, தங்கை உயிரிழப்பு - என்ன நடந்தது?

கிணற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்த சகோதரிகள்
உயிரிழந்த சகோதரிகள்

தஞ்சை அருகே கோமாவரத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மனைவி கோமதி. தம்பதியின் மூத்த மகள் பெரியநாயகி (8). அதேப் பகுதி பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் விருத்திகா (6) அதேப் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஒரு வருடமாக புண்ணியமூர்த்தி தனது மனைவியின் சொந்த ஊரான தஞ்சை அருகே உள்ள வல்லம் புதூருக்கு குடும்பத்துடன் வந்து தங்கி உள்ளார்.

இன்று மாலை பெரியநாயகி, விருத்திகாவுடன் அப்பகுதியில் உள்ள புதுக்குளத்திற்கு புண்ணியமூர்த்தி குளிப்பதற்காக சென்றுள்ளார்.

2 மகள்களையும் கரையில் உட்கார வைத்துவிட்டு இயற்கை உபாதை கழிக்க புண்ணியமூர்த்தி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

சிறிதுநேரத்தில் புண்ணியமூர்த்தி திரும்பி வந்து பார்த்தபோது கரையில் உட்கார்ந்திருந்த பெரியநாயகி மற்றும் விருத்திகாவை காணாமல் அதிர்ச்சி அடைந்து தேடியுள்ளார்.

சிறிது நேரத்தில் சிறுமிகள் இருவரும் குளத்தில் சடலமாக மிதந்தது தெரிய வந்தது கண்டு கதறி அழுதார். தகவலறிந்து கிராம மக்கள் ஓடி வந்து குளத்தில் இறங்கி 2 சிறுமிகளின் உடலையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து அறிந்து வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமிகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்கா, தங்கை இருவரும் ஒரே நேரத்தில் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com