கோவை மாவட்டம், மேட்டுப்பாளைய வானத் சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் வனப்பகுதி அருகே உள்ள விவசாய நிலத்தில் பெண் காட்டு யானையொன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இறந்த யானையின் உடலை ஆய்வு செய்தனர். நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி வெளியேறிய இந்த யானை அங்குள்ள தனியார் தோட்டத்தை கடந்து செல்ல முற்பட்ட போது இறந்துள்ளது தெரிய வந்தது. யானையின் காது பகுதியில் முள் கம்பி கிழித்துள்ள காயமும் தெரிந்தது. இதனால் யானை அருகில் உள்ள தோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து பலியானதா, அல்லது வேறு காரணங்களினால் இறந்ததா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வனத்துறை கால்நடை மருத்துவர் தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேதப் பரிசோதனையில் , பெண் யானையின் தலை மூளையில் ஈயக்குண்டு தாக்கி உள்ளது தெரியவந்தது. காது அருகில் இருந்த காயத்திலிருந்து, மூளை வரை துளைத்திருந்தது. அதையடுத்து அத்தோட்டத்தை சேர்ந்த தேக்கம்பட்டி, இராமசாமி & கிருஷ்ணசாமி இருவரையும் பிடித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.