தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்வுகளை ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்கும்படி பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தல்
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தேர்வுகளை ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதை அடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையமும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தேர்வு குறித்து புதிய மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், மக்களவை தேர்தல் நடைபெறவிருப்பதை அடுத்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகளை வரும் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் முடிவடையும். தற்போது மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி, ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு கால அட்டவணைகளை மாற்றி, முதன்மை பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், வேலை இழப்பு ஏற்படும் நாட்களை சரி செய்ய, சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.