சிறப்பு முகாம் எப்போது நடத்துவீர்கள்?' - அரசுக்கு இ.பி.எஸ் மீண்டும் கேள்வி

சுகாதாரத்துறை அமைச்சர் வாய்ப்பந்தல் அறிக்கை வெளியிட்டு வருகிறார்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் விஷ காய்ச்சல், சிக்கன் குன்யா, டெங்கு போன்றவை பரவி மக்கள் அவதிப்படுவதால், சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிராண வாயு (ஆக்சிஜன்) சுவாசிக்கும் உபகரணத்திற்குப் பதிலாக “காகித கப்”பயன்படுத்துப்படுவதாக செய்திகள் வெளியிட்டு தி.மு.க-வின் ஆட்சியில் அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை இன்றைய நாளிதழ்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.

120 கோடி ரூபாய்க்கு மருந்துகள், உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று வாய்ப்பந்தல் அறிக்கை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர், அரசு மருத்துவமனைகளில் அடிப்படையாகத் தேவைப்படும் பிராண வாயு உபகரணங்களை கூட கொள்முதல் செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே, உயிர் காக்கும் பிராண வாயு உபகரணங்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறைவின்றி கிடைக்க துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் விஷ காய்ச்சல், சிக்கன் குன்யா, டெங்கு போன்றவை பரவி மக்கள் அவதிப்படுவதால், சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்ற எனது யோசனையை ஏற்காமல் சுகாதாரத்துறை அமைச்சர் மழுப்பலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக மக்கள் உடல் நலன் காப்பதில் அரசியல் செய்யாமல், அஜாக்கிரதையாக இருந்து விடாமல் , அடிப்படை தேவையான இந்த சிறப்பு முகாம்களையும் உடனடியாக தமிழ்நாடு முழுவதிலும் நடத்திட மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com