’முதல்வரை தவறாக வழிநடத்துகிறார்கள்: தமிழக அரசு இன்னும் ஓரிரு வாரங்களில் கலைக்கப்படலாம்’- ஹெச்.ராஜா

எச்.ராஜா
எச்.ராஜா

’’சட்டத்தை மதிக்காமல் தமிழக முதல்வரை சிலர் தவறாக வழிநடத்தும் நிலையில் தமிழக அரசு இன்னும் ஓரிரு வாரங்களில் கலைக்கப்படலாம்’’என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’பழனி மலைக்கோவிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம். தமிழக அரசுதான் மதசார்பற்றதே தவிர, தமிழக அரசின் இந்து சமய‌ அறநிலையத்துறை என்பது மத சார்புடையதுதான். இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து மதம் மற்றும் பண்பாட்டை பரப்பக்கூடிய செயலை செய்யவேண்டும். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர் பாபு இந்து மதத்திற்கு எதிரான அனைத்து பணிகளையும் செய்துவருகிறார்.

உதாரணமாக பழனி அருகே கள்ளிமந்தையம் பகுதியில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் உள்ள பசுக்கள் பராமரிப்பின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களில் பல மாடுகளை கேரளாவிற்கு அடிமாட்டிற்கு அனுப்பப்படுகிறது. பசுக்களை இல்லாமல் செய்துவிட்டு 288 ஏக்கரில் அமைந்துள்ள கோசாலை நிலத்தை சிப்காட் நிறுவனம் அமைக்க சேகர் பாபு முயற்சி செய்கிறார்.

தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அரசுக்கு சொந்தமானது தவிர, இந்து கோவில்கள் அரசுக்கு சொந்தமானது அல்ல. அது இந்து மக்களுக்கு சொந்தமானது. பழனி கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் வரலாம் என்றால், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த சம்பவம் போல வரும் காலங்களில் பழனி கோவிலில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது பெரிய பிரச்சனையாக இல்லை என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளது கேலிக்குரியது. பாமக தொண்டர் ஒருவர் வெட்டிக்கொலை செய்திருப்பது, 50விசாரணைக்கைதி மரணம் ஆகியவை நடந்துள்ள நிலையில், முதல்வருக்கு தங்களது குடும்பத்தில் எப்போது சிபிஜ நுழையுமோ? என்ற அச்சமும், முதல்வர் குடும்பத்தில் துர்கா ஸ்டாலின் தவிர மற்ற அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்பதால், சிபிஜ தமிழகத்திற்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்திருப்பது ஆகியவை எல்லாம் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தெளிவாக விளக்குகிறது.

தி.முக. ஆட்சி இன்னும் ஓரிரு வாரத்தில் ஆட்சி கலைக்கப்படலாம். மிகப்பெரிய குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயல்வதும், 38-நாட்களாக ஒரு அமைச்சரை மருத்துவமனையில் வைத்துள்ளதும், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத அளவில் மறைத்து வைத்துள்ளது ஏன் என்றும் கடுமையாக விமர்சித்தார். சட்டத்தை மதிக்காமல் முதல்வரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள்’’ என்று எச்.ராஜா தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com