கெடா விருந்தில் வாலிபர் குத்திக் கொலை: கோயிலில் என்ன நடந்தது?

உதயகுமார் மற்றும் உதய பிரகாஷ் வாலிபர் தீபக்கை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளனர்.
 தீபக்
தீபக்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுக்கா, வாத்தலை அருகே உள்ள சுனைபுகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் தீபக் (18) பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முசிறி அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவை முன்னிட்டு இரவு நடைபெற்ற கறி விருந்துக்காக தீபக் வந்துள்ளார். அப்போது சுக்காம்பட்டி கிராமத்திற்கு விருந்துக்கு வந்திருந்த சுனைபுக நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் உதயகுமார் மற்றும் உதய பிரகாஷ் மற்றும் ஆகியோருக்கும், பெயிண்டர் தீபக்கிற்கும் இடையே தகராறு நடந்துள்ளது.

இதில் உதயகுமார் மற்றும் உதய பிரகாஷ் வாலிபர் தீபக்கை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய தீபக்கை அருகில் இருந்தவர்கள் முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே தீபக் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் முசிறி அரசு மருத்துவமனைக்கு சென்று கொலை செய்யப்பட்ட தீபக் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய உதய பிரகாஷ், உதயகுமார் இருவரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கறி விருந்துக்கு வந்த வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com