விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் பகுதியில் விஷ சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் விஷ சாராயம் அருந்திய 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதிப்புக்குள்ளாகி பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விஷ சராயம் அருந்தியதில் 22 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த முதல்வர் மு.க ஸ்டாலின் சிகிச்சை பெறுவோரிடம் நலம் விசாரித்தார். மேலும், உடனடியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி விஷசாரயத்தை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை திறப்பதற்கு முன்பே கடையின் அருகே இருந்த மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதனை வாங்கிக் குடித்த குப்புசாமி என்ற முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், விவேக் என்ற 36 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் அடுத்து தஞ்சை கிழக்கு காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.