இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தண்டிக்க வேண்டும் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை 14ம் ஆண்டு நினைவு அஞ்சலி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூன் முன்பு பழ நெடுமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்' "முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டில் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளான மக்களுக்கும், மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 14 ஆண்டுகள் கடந்தாலும் கூட இனப்படுகொலைக்கு காரணமானவர்களை உலகம் இன்னும் கண்டிப்பதற்கு முன் வரவில்லை. இலங்கையில் வாழக்கூடிய சிங்கள மக்களே, இனப்படுகொலை செய்தவர்களை அந்நாட்டை விட்டு விரட்டிவிட்டனர். சிங்கள மக்களுக்கு இருந்த இந்த உணர்வு உலக நாடுகளுக்கு வரவில்லை. எனவே, இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் எங்கே இருந்தாலும், அவர்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன்னால் நிறுத்துவதற்கும், தண்டிப்பதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதற்கு இந்தியா முன்நிற்க வேண்டும்.
உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ராஜீவ் காந்தி கொலையில் 26 பேருக்கு தடா நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக தூக்கு தண்டனை விதித்தது. இவர்களில் 19 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. மீதமிருந்த 7 பேரும் இப்போது உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களில் ஈழத்தமிழர்களான முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்த பிறகு, அவர்களைச் சிறப்பு முகாம் என்ற சிறையில் வைத்திருப்பது நியாயமற்றது. எனவே, இவர்களை சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்து, அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்' என்றார்