கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது அவதூறாக பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சமீபத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை.
இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று, அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்றார். இந்த பேச்சை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியது. இந்த நிலையில், நடிகர் ராஜ்கிரண், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுகிறோம்.
இதை தவறாகப் புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
ராஜ்கிரண் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "சி.ஐ.ஏ போராட்டத்துக்கு என்னுடன் ராஜ்கிரன் உடன் வந்தாரா அல்லது முத்தலாக் தடை சட்டத்திற்கு வீதியில் நின்று போராடினாரா, இல்லையே.
நான் மதத்தை பற்றிப் பேசிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் என்னுடைய பேச்சை முழுமையாக கேட்டாரா எனத் தெரியவில்லை. சிறிய காணொளியை மட்டும் பார்த்துவிட்டு முடிவெடுக்கக் கூடாது.
அவருக்கு என்னை திட்டுவதற்கும், என் மீது கோபப்படுவதற்கும் உரிமை உள்ளது" என்று பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், திராவிட நட்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் சீமான் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ், சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.