'நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு நாட்டின் சின்னமாக "செங்கோல்" இருக்கும்' என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், இன்று தமிழக ஆளுநர் மாளிகையில், ஆளுநர்கள் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்
அப்போது, பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'டெல்லியில் வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து, நேருவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது.
இந்த செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த 100 ஆண்டுகளுக்கு நாட்டின் சின்னமாக "செங்கோல்" இருக்கும்.
இந்த விழாவில், திருவாடுதுறை, தருமபுரம், மதுரை உள்ளிட்ட 20 ஆதினங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படுவதன் மூலம் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். செங்கோல் நிறுவப்படுவதில் எந்த அரசியலும் இல்லை.
இந்த செங்கோலை தயாரித்த உம்மிடி சகோதரர்கள் மற்றும் நாடாளுமன்றத்தை கட்டி எழுப்பிய தொழிலாளர்களும் கவுரவிக்கப்பட உள்ளனர்.
விழாவில், அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்பதே பா.ஜ.க-வின் நிலைப்பாடு. இதை வலியுறுத்தும் வகையில், மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு முறையான அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே, நாடாளுமன்ற விழாவில் புறக்கணிப்பு செய்வதை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார்.