மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே அனுமதி கிடைத்த பிறகே சென்டாக் மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும்.
அதுவரை உயர் கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங்கை நிறுத்த அரசு முன்வர வேண்டும் என புதுச்சேரி அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகருத்து வருகிறது. கடந்த 2 தினங்களாக 105.8 டிகிரி வெயில் இருக்கிறது.
இதனால், வயதானவர்கள், குழந்தைகள் வெளியே போகமுடியவில்லை. இந்த நிலையில் வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
எனவே, 7-ம் தேதிக்கு பதிலாக 15-ம் தேதி பள்ளிகள் திறக்கவேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்துள்ளோம். மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் இது குறித்து நல்ல முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.
மேலும், சென்டாக் கவுன்சிலிங்குற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாலுக்கா அலுவலகங்களில் சான்றிதழ்களை பெறமுடியாத சூழல் உள்ளது. எனவே, 6-ம் தேதி வரை இருந்த விண்ணப்ப தேதியை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே, அனுமதி கிடைத்த பிறகே சென்டாக் மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும்.
அதுவரை உயர் கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங்கை நிறுத்த அரசு முன்வர வேண்டும். இது குறித்து ஒரு அறிக்கையை சுகாதாரத்துறையும், சென்டாக் நிர்வாகம் இணைந்து அறிவிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சி.பி.எஸ்.சி பாடத்தில் தமிழை கட்டாய பாடமாக இருக்குமா என்று தெளிவாகக் கூறவேண்டும். எங்களைப் பொறுத்தவரை சி.பி.எஸ்.சி பாடத்திட்டமே தவறு.
கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாத ஒரே மாநிலமாக பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரி மாநிலம் உள்ளது. பா.ஜ.க-வின் கல்வி அமைச்சராக உள்ள நமச்சிவாயம் பா.ஜ.க அரசின் உத்தரவான கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாமல் உள்ளது ஏன் என கேள்வி எழுப்பியவர்,
தனியார் பள்ளிக் கூடங்களுக்கு சாதகமான நிலைபாட்டை புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.