தி.மு.க நீட் தேர்வை ரத்து செய்ய குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் போராட்டம் நடத்த வேண்டும் என மதுரையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஆகஸ்ட் 20ல் நடைபெறும் அ.தி.மு.க பொன்விழா மாநாடு விளம்பர அனுமதி தொடர்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதனை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில், "அதிமுக மாநாடு நடைபெறும் நாளில் தி.மு.க நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாக அறிவித்தது சீப்பான, தரக்குறைவான செயலாகும்.
நீட் தேர்வு ரத்து செய்ய தமிழகத்தில் போராட்டம் நடத்துவது எந்தவொரு பயனுமில்லை.தி.மு.க நீட் தேர்வை ரத்து செய்ய குடியரசு தலைவர், பிரதமர் வீடு முன்பாக தான் போராட்டம் நடத்த வேண்டும்.
தி.மு.கவால் தான் நீட் தேர்வு நடைமுறை கொண்டு வரப்பட்டது, நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க மக்களிடத்தில் நம்பிக்கையை பெற முடியாது. மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள். தி.மு.க-வின் நாடகத்தை நம்ப மாட்டார்கள்" என கூறினார்.