லண்டன் செல்ல விரும்புவதாக முருகன் கோரிக்கை - உயர் நீதிமன்றம் உத்தரவு என்ன?

லண்டனில் வசிக்கும் தனது மகளுடன் வாழ விரும்புவதாக தகவல்
முருகன்
முருகன்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பதற்காக திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னைக்கு வர காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டி விடுதலை செய்து உச்ச நீதிமன்றம், கடந்த (2022 -ம் ஆண்டு) ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இலங்கை நாட்டு குடியுரிமை பெற்ற முருகன் மட்டும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், முருகன் சார்பில் அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் சொந்த நாட்டிற்கு செல்லும் வரை வெளியே செல்லக்கூடாது என உத்தரவிட்டு உள்ளதாகவும், உயர் பாதுகாப்பு சிறைகளைவிட முகாமில் நிலைமைகள் மற்றும் சூழ்நிலைகள் கடுமையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

லண்டனில் வசிக்கும் தனது மகளுடன் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தற்போதைய நிலையில் முருகனுடைய சொந்த நாடான இலங்கையில் அவரது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், அங்கு செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சர்வதேச பாஸ்போர்ட்டை பெற சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு செல்வதற்காக சிறப்பு முகாமில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவும், அங்கு சென்று வர தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசிற்கும், வெளிநாட்டினர் பதிவு மண்டல அலுவலருக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்க வேண்டுமா? அல்லது தனி நீதிபதி விசாரிக்க வேண்டுமா? என தலைமை நீதிபதியின் உத்தரவை பெறும்படி, நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com