சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து கலாஷேத்ரா உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரம், விசாரணைக் குழு அமைப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில் கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் வழங்கியுள்ள பதில் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சு.வெங்கடேசன் எம்.பி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘நான் கலாஷேத்ராவில் இருந்த பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான உள் புகார் குழு பற்றிய கேள்வி ஒன்றை நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தேன்.
கலாஷேத்ரா உள் புகார் குழு பற்றிய சர்ச்சை ஏதும் இருந்ததா? அதன் மீது என்ன நடவடிக்கை? உள் புகார் குழுக்கள் செயல்பாடு பற்றி கண்காணிக்க என்ன முறைமை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது? என நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய கலாசாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்திருக்கும் பதில் அதிர்ச்சி அளிக்கிறது.
சர்ச்சை உள்ளதா? என்ற முதல் கேள்விக்கு ‘இல்லை’ என்று பதில் அளித்துள்ளார். ஆனால் இதுதொடர்பான சர்ச்சை ஊடகங்களில் பெரிய அளவுக்கு நடந்தது.
கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் அவர்களே உள் புகார் குழு உறுப்பினராகவும் இருந்தார். குழு உறுப்பினரை நியமிக்கிற இடத்தில் உள்ளவரே உறுப்பினராக தனனைத் தானே நியமித்துக் கொள்ள முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கும் ( ரிட் மனு 11764 / 2023) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து, அதில் இடைக்கால ஆணைகள் எல்லாம் பிறப்பிக்கப்பட்ட செய்திகள் வந்தன. ஆனால் ஒன்றுமே நடக்காததுபோல அமைச்சர் பதில் அமைவது நாடாளுமன்றத்திற்கு தகவல்களை மறைப்பதாகும்.
அதை விடுத்து ஏப்ரல் 2023ல் உள் புகார் குழு ஒன்று அமைக்கப்பட்டதாக பதில் தெரிவித்துள்ளார். அதற்கு முன்பு எந்த குழு இருந்தது? அதன் உள்ளடக்கம் என்ன? இது பற்றியெல்லாம் அமைச்சர் பதிலில் ஒன்றுமே இல்லை. ஆகவே மீறல்கள் குறித்த நடவடிக்கை பற்றிய கேள்விக்கு தனியாக பதில் அளிக்கவும் இல்லை.
ஆனால் இதுபோன்ற சட்ட ரீதியான முறைமைகளின் செயலாக்கம் கலாசாரத் துறையால் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தகவல்களிலேயே இவ்வளவு இடைவெளிகள்.
கலாஷேத்ராவை காப்பாற்றுவதில் காண்பிக்கிற அக்கறையில் கொஞ்சமாவது நாடாளுமன்ற நெறிமுறைகளை காப்பாற்றுவதில் காண்பியுங்கள் என, சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.