‘காலையில் இனி காபி, டீ குடிக்க வேண்டாம்; பிராந்தி, விஸ்கி குடிக்கலாம்’ - செல்லூர் ராஜூ வேதனை

'’பள்ளிக்கூடத்துக்கு போகும்போதே குடித்துவிட்டு போங்கள் மட்டையாகி விடுங்கள்’’
செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

‘காலையில் 7 மணிக்கு இனிமேல் டீ காபி குடிக்க வேண்டாம், பிராந்தி, விஸ்கி குடிக்கலாம்’ என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வேதனை தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மதுரை கோரிப்பாளையம் அ.தி.மு.க மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க மாநாடு பல மடங்கு சிறப்பாக நடைபெற உள்ளது.

அ.தி.மு.க-வுக்கு ஏறுகாலம் தொடங்கி இருக்கிறது. தி.மு.க-வுக்கு இனி இறங்கு காலம்தான். காலையில் 7 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது.

மினி குவாட்டர் மக்களுக்கு கொடுக்க உள்ளார்கள். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. காலையில் 7 மணிக்கு காபி, டீ குடிக்க வேண்டாம். பிராந்தி, விஸ்கி குடிக்கலாம்.

தி.மு.க அரசு எதை நோக்கி பயணிக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர்தான் இந்த தலைமுறையை கெடுத்தவர்.

தமிழக மக்களை குடிகாரன் ஆக்கிய முதல்வராக ஸ்டாலின் பெயர் எடுப்பார். பள்ளிக்கூடத்துக்கு போகும்போதே குடித்துவிட்டுப்போங்கள் மட்டையாகி விடுங்கள்.

கூலித் தொழிலாளர்கள், கட்டுமான பணியாளர்கள் காலையில் குடித்துவிட்டு வேலைக்கு சென்றால் குடும்பத்திற்கு உத்தரவாதம் யார் கொடுப்பது? இது எங்களுக்கு மன வேதனையாக இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமிதான் பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும்.

வெங்காயம் விலை 240 ரூபாய் ஆகிவிட்டது. வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். வெங்காய விலையை கேட்டாலே இவர்கள் ஆட்சியில் கண்ணீர் வருகிறது.

வீட்டு வரி,மின் கட்டண உயர்வு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது. இரண்டு கோடியே 25 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தாலும் தி.மு.க-விற்கு யாரும் ஓட்டுபோட மாட்டார்கள்.

இனி 90 மில்லி லிட்டர் சாராயம் 7 மணிக்கு கிடைக்கும். 7 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பு விரைவில் நடைமுறைப்படுத்துவார்கள். இதை கவனித்த தாய்மார்கள் யாரும் ஓட்டுபோட மாட்டார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் எங்களுக்கு எளிதாகிவிடும். தி.மு.க-வின் துக்ளக் தர்பார் ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். கலைஞர் நூலக மாநாட்டை மக்கள் கூட்டத்தை கூட்டி செயற்கையாக கூட்டத்தை கூட்ட நினைக்கிறார்கள்.

தக்காளியை ரேஷன் கடையில் விற்பது பெருமையா? நகரும் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும். தி.மு.க-வினர் செந்தில் பாலாஜியை சுதந்திரப் போராட்ட தியாகி போல் பார்க்கின்றனர்’ என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com