கூட்டணி குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் பேசி வருவதாக கூறப்பட்ட நிலையில் அக்கட்சி தலைவர் குமாரசாமி அதை மறுத்துள்ளார்.
224 தொகுதிகளில் நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக மற்றும் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காவிடில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன் சேர்ந்து தான் கூட்டணி ஆட்சி அமைத்தாக வேண்டும்.
பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக கூறி இருப்பதால், காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளின் தலைவர்கள் மஜத குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ”தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். 30 முதல் 32 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதாதளம் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கூட்டணி குறித்து இதுவரை எந்த கட்சியும் எங்களைத் தொடர்புகொள்ளவில்லை. தேர்தலில் இரு தேசிய கட்சிகளும் அமோக வெற்றிபெறும் என தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவிக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு சின்ன கட்சி, எங்களுக்கு பெரும் முக்கியத்துவம் இல்ல. இன்னும் சில மணிநேரங்களில் முடிவுகள் தெரிந்துவிடும். நல்ல வளர்ச்சியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.