கர்நாடகாவில் ஆளும் கட்சி தேர்தலில் வெற்றிப்பெறாது, பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்ற எழுதப்படாத விதியை பாஜக உடைக்கும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்து முடிந்தது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்காக 36 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் 113 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஒரு கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியும். தேர்தலுக்கு பிந்தைய இந்தியா டுடே, சி வோட்டர் -ஆக்சிஸ் ஆகியவற்றின் கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் பாஜக நிச்சயம் ஆட்சியமைக்கும் என பாஜகவின் மாநில தேர்தல் இணை பொறுப்பாளரும், தமிழக பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகாவில் 1985-க்கு பிறகு ஆளும் கட்சியாக இருக்கும் கட்சி தேர்தலில் வெற்றிப் பெறாது என்றும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்ற எழுதப்படாத விதியை பாஜக இம்முறை உடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்தாலும் ஒரு முறை கூட பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை தனித்து வென்றது இல்லை. இந்த வரலாற்றை பாஜக இந்த முறை மாற்றும் என தெரிவித்துள்ள அண்ணாமலை, கர்நாடகாவில் 130-க்கும் அதிகமான இடங்களில் பாஜக அமோக வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும். மற்றவர்கள் ஆதரவை கேட்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.