'ஜல்லிக்கட்டு போட்டி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வெற்றி பெற்றதற்கு அ.தி.மு.க அரசின் சட்ட நடவடிக்கைகளே காரணம்' என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அம்மா அரசின் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மூலமாக இன்றைக்கு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்தை உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் உறுதி செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று சட்டமன்றம் அறிவித்துள்ள நிலையில், நீதித்துறை மாறுபட்ட கருத்தை எடுக்க முடியாது” என்கிற அ..இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றத்தின் கருத்தை வரவேற்கிறோம்.
நமது கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற அ.இ.அ.தி.மு.க. அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பல்வேறு முறை வலியுறுத்தியதன் காரணமாகவே இந்த வெற்றி சாத்தியம்.
கழக ஆட்சிக்குப் பின்னரும் அஇஅதிமுக தன்னையும் மனுதாரராக இணைத்துக் கொண்டு எடுத்த அனைத்து சட்டபோராட்டங்களுக்கும் துணை நின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என தெரிவித்துள்ளார்.