விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பாவது செய்திருக்க வேண்டாமா? அல்லது 'இனி பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை' என்று அறிவித்துவிட்டு விமானம் ஏறிச் சென்னைக்கு வந்திருக்க வேண்டாமா?
இது தொடர்பாக, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை' என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி மாநிலங்களவையில் அறிவித்துவிட்டார். அதுவும், பா.ம.க தலைவர் அன்புமணி கேள்விக்குத்தான் அவர் அவ்வாறு பதில் அளித்துள்ளார்.
என்.எல்.சி விவகாரத்தில், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட இழப்பீட்டை விட அதிகமாக இழப்பீடு வழங்கியது மட்டுமன்றி, ஏற்கெனவே இழப்பீடு பெற்றவர்களுக்குக் கூட மேலும் கூடுதல் தொகை பெற்றுத் தந்த அரசு திமுக அரசுதான். எங்களின் முதல்வர்தான்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அன்புமணி போராட்டம் என்ற பெயரில் போலீசார் மீது கல்வீசி, பொதுச் சொத்துகளை வழக்கம் போல் சேதப்படுத்தியுள்ளார்.
உழவர்களையும், மக்களையும் தூண்டிவிட்டு இந்த அரசுக்கு எதிராக ஒரு சதித் திட்டத்தை உருவாக்கி வருகிறார். வட மாவட்டங்களின் முன்னேற்றத்தை இருட்டில் தள்ளிவிட துடிக்கிறார்.
ஒரு பக்கம் 'மண்ணையும் மக்களையும் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம்' என்றும் மற்றொரு பக்கம், 'நாங்கள் டெல்லி அளவில் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். தமிழகத்தில் இல்லை' என்றும் நாடகம் போடுகின்றனர்.
சென்னையில் 'வீராவேசம்' பேசும் அன்புமணி, டெல்லியில் கைகட்டி நின்று மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத்துறை கைது செய்துவிடப் போகிறது என்ற கலக்கமா?
விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பாவது செய்திருக்க வேண்டாமா? அல்லது 'இனி பாஜகவோடு கூட்டணி இல்லை' என்று அறிவித்துவிட்டு விமானம் ஏறிச் சென்னைக்கு வந்திருக்க வேண்டாமா?
அப்படியெல்லாம் அன்புமணி அவசரப்படமாட்டார் என்று எங்களுக்கு தெரியும். காரணம், அப்படி செய்தால் மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை வந்து தன் வீட்டுக் கதவை தட்டும் என்பது அவருக்குத் தெரியும்.
அதனால் தான் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் 'கைவிரித்தும்' இவரால் அது பற்றி கைதூக்கி கேள்வி எழுப்ப முடியாமல் அமைதியாகி விட்டார். எனவே, இது போன்ற 'கபட நாடகங்கள்' மூலம் திசைதிருப்பி விட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.