அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
திருப்பூர் மாவட்டம் அவினாசி பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், கடந்த 23-ம் தேதி அதிகாலை நேரத்தில் கோயிலின் உள்ளே இருந்த சிலைகள், நாயன்மார்கள் சிலைகள் உடைத்து, கோபுரங்களும் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோயில் சிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மே 23-ம் தேதி அதிகாலை, அருள்மிகு அவினாசிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி சிலைகள், நாயன்மார்கள் சிலைகள் உடைத்து, கோபுரங்களும் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த நிலையில், மனநிலை சரியில்லாத ஒருவர் இந்த பாவச்செயலை செய்தார் என்று காவல்துறை கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை. இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்து விரோத போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தி.மு.க அரசு, இந்துக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை உணரும் என்று நம்புகிறேன்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.