அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இதற்காக கடந்த மாதம் பாட்னாவில் சந்தித்து ஆலோசனை நடத்திய எதிர்க்கட்சித்தலைவர்கள், அடுத்ததாக பெங்களூருவில் வருகிற 13 மற்றும் 14-ம்தேதிகளில் சந்திக்க உள்ளனர். எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து உள்ளார். எந்த தலைவரையும் பெயர் குறிப்பிட்டு சொல்லாமல் கடுமையாக சாடினார்.
மத்தியப் பிரதேசத்தில், ஷாதோல் மாவட்டத்தில் தேசிய அரிவாள் செல் இரத்த சோகை ஒழிப்பு இயக்கம் 2047 திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, மாநிலத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில், ’’காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் "குடும்பத்தை மையமாகக் கொண்ட" கட்சிகள் வெற்றி பெறுவதற்கு மக்களுக்கு "தவறான" உத்தரவாதங்களை வழங்குகின்றன’’ என்றார்.
"வம்சக் கட்சிகள் தங்கள் குடும்ப நலனுக்காக மட்டுமே உழைக்கின்றன. அவர்களுக்கிடையேயான பழைய மோதல்களால் எதிர்க்கட்சி ஒற்றுமைக்கு உத்தரவாதம் இல்லை என்பதைக் காட்டுவதாகவும், "ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள்.ஜாமீனில் வெளிவரும் நபர்கள் கூட்டாளிகளாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
"காங்கிரஸ் உட்பட குடும்பத்தை மையமாகக் கொண்ட கட்சிகள் அளிக்கும் பொய்யான (தேர்தல்) உத்திரவாதங்கள் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய சொந்த (அரசியல்) உத்தரவாதம் இல்லாவிட்டாலும், உத்திரவாதம் அளிப்பதாக திட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர்" என்று பிரதமர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் "தவறான உத்தரவாதங்கள்" என்பது "எங்கேயோ ஏதோ தவறு" என்று அர்த்தம். இலவச மின்சாரம், பயணம், ஓய்வூதியம், மலிவான பெட்ரோல் அனைத்தும் மறைக்கப்பட்ட செலவுகள் அல்லது எதிர்மறையான விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. இலவச மின்சாரத்திற்கு அவர்கள் உத்தரவாதம் அளிக்கும்போது, அவர்கள் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கத் தயாராகிறார்கள் என்று அர்த்தம். இலவச பயணத்திற்கு உத்தரவாதம் என்பது அந்த மாநிலத்தில் போக்குவரத்து சேவைகளை எதிர்காலத்தில் அழிக்கும். ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான உத்தரவாதம் அந்த மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கூட கிடைக்காது. மலிவான பெட்ரோலுக்கு உத்தரவாதம் அளிப்பது என்பது, வரிகளை உயர்த்தி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கத் தயாராகிவிட்டனர். வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கான உத்தரவாதத்தை அவர்கள் எதிர்காலத்தில் தொழில்கள் மற்றும் வணிகங்களை அழிக்கும் கொள்கைகளை கொண்டு வருவார்கள்" என்றும் பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன், 50 கோடி ஏழை பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை, உஜ்ஜவாலா திட்டத்தின் கீழ் 10 கோடி பெண்களுக்கு புகையில்லா சமையல் போன்றவற்றை வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி தனது அரசின் முயற்சிகளை பாராட்டினார். .
"நாட்டின் சாதாரண குடும்பத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான உத்தரவாதம் அவர்களிடம் இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் ஜாமீனில் உள்ளனர். அவர்கள் மோசடிகளில் தண்டனை பெற்றவர்களுடன் ஒன்றாக இருக்கிறார்கள்" என்று பிரதமர் மோடி கூறினார்.