டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க அங்கம் வகிக்கிறது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க அங்கம் வகிக்கவில்லை என பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 18 பேரை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், "மண்ணுக்கும், மக்களுக்குமாக போராடிய பா.க.மவை சேர்ந்த 55 பேரை காவல்துறை கைது செய்துள்ளது, கைது செய்யப்பட்ட பா.ம.கவினரை விடுவிக்க வேண்டும், என்.எல்.சி க்காக தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்த கூடாது, என்.எல்.சி நிலக்கரி எடுத்த பின்னர் நிலங்களை அழித்து வருகிறது, தமிழகத்தில் இனி நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என முதல்வர் 3 மாதங்களுக்கு முன் அறிவித்தார்.
ஆனால், அப்போது, 3 போகம் விளையும் விலை நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது, என்.எல்.சி 3 ஆம் சுரங்கம் அமையுமா? அல்லது அமையாதா? என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
என்.எல்.சி பிரச்சினை தமிழக மக்களின் பிரச்சினை, விளை நிலங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும், தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது,
என்.எல்.சி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது, என்.எல்.சி நிறுவனத்துக்கு தமிழக அரசு ஏன் உதவியாக உள்ளது என தெரியவில்லை? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை மிகப்பெரிய தண்டனை, சாதாரண வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது.
ராகுல்காந்தி வழக்கில் தீர்ப்பு விபரம் தெரியவில்லை, தீர்ப்பின் விபரம் கிடைத்தவுடன் பேசுகிறேன். ராகுல்காந்தி வழக்கிற்கும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்றார்.
மேலும், டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க அங்கம் வகிக்கவில்லை.
வரும் 2026- ஆண்டு பா.ம.க ஒருமித்த கருத்துடன் உள்ள கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கும். அமலாக்கத்துத்துறை சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றார்.