'தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரின் பேட்டி, இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தும் விதமாக உள்ளது' என இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்றும், அதற்கு தடையாக உள்ள இந்து தலைவர்களை அகற்றும் சதித் திட்டத்துடன் செயல்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில பொறுப்பாளர்களாக இருந்த 2 வழக்கறிஞர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மதுரையில் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மதுரை மற்றும் சென்னையில் வழக்கறிஞர்களின் நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தனர்.
இந்த நிலையில், இந்த விவாகரம் குறித்து இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் ஒருவர், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேட்டியளித்துள்ளார்.
அதில், ஏதோ அந்த 2 வக்கீல்களும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜரானதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொறுப்பாளர்களாக இருந்து செயல்பட்டவர்கள். அந்த அமைப்பின் திட்டங்களில் அவர்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி தான் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க துணைத் தலைவரின் பேட்டி இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தும் விதமாக உள்ளது.
எனவே, இந்திய தேசியத்தின் மீது தாக்குதல் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் அமைப்பின் மாநில பொறுப்பாளர்களுக்கு ஆதரவாக பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்த தமிழக பா.ஜ.க துணைத் தலைவரின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது' என தெரிவித்துள்ளார்.