'மணிப்பூர் கலவரம் பற்றி நான் பேசவில்லையா?' - கொதித்த இ.பி.எஸ்

மணிப்பூர் சம்பவம் பற்றி நான் ஏற்கெனவே ட்விட்டர் வாயிலாக என்னுடைய கண்டனங்களை பதிவு செய்திருந்தேன் என எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
'மணிப்பூர் கலவரம் பற்றி நான் பேசவில்லையா?' - கொதித்த  இ.பி.எஸ்

சென்னை: மணிப்பூர் சம்பவம் பற்றி நான் ஏற்கெனவே ட்விட்டர் வாயிலாக என்னுடைய கருத்துகள், கண்டனங்களை பதிவு செய்திருந்தேன். அதை அறிந்து கொள்ளாதது முதல்வரின் ஆட்சி முறையை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மணிப்பூர் சம்பவம் குறித்து நான் ஏதும் பேசவில்லை என்று நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மணிப்பூர் கலவரம் துவங்கிய உடனேயே அதனைக் கண்டித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள தமிழர்களை பாதுகாப்பாகக் காப்பாற்ற வேண்டும் என்றும் அதிமுக சார்பில் 8.5.2023 நாளிட்ட அறிக்கை மூலம் திமுக அரசின் முதலமைச்சருடைய கவனத்தை ஈர்த்திருந்தேன்.

குறிப்பாக, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவம் குறித்து நான், எனது கடுமையான கண்டனத்தை 21.7.2023 அன்றே தெரிவித்திருந்தேன். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் வெளியிடும் அறிக்கைகள் மற்றும் ட்விட்டர் பதிவுகள் போன்றவற்றைக்கூட தன்கீழ் உள்ள காவல் துறை மூலம் தெரிந்துகொள்ளாத முதல்வர், மணிப்பூர் சம்பவத்தைப் பற்றி நான் பேசவில்லை என்று தனது நிதியமைச்சர் மூலம் 22.7.2023 அன்று பேட்டி அளிக்க வைத்ததும், பிறகு, 26.7.2023 அன்று பகிரங்கமாக திருச்சி பொதுக்கூட்டதில் பேசி இருப்பதும், ஒரு மாநிலத்தின் முதல்வர், தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருப்பதை தமிழக மக்களிடையே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதிலும், குறிப்பாக, பெண்கள் பாதுகாப்புடன் நடமாட வேண்டும் என்று காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து சட்டத்தின் ஆட்சியை நடத்தியது. தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு எனது தலைமையிலான ஆட்சியில், பாலியல் வன்கொடுமை குற்றங்கள் - 7. ஆனால், திமுக அரசின் 2022-ஆம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பின்படி நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை குற்றங்கள் - 58. இதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

எனவே, இனியாவது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பற்றத் தன்மை, போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறுதல் போன்றவற்றிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தும்; கடும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியும், வாக்களித்த தமிழக மக்கள் சிரமமின்றி வாழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com