தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நினைவுத்தூண் எழுப்ப வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகம் சார்பில் தென் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டில் அடிப்படை வசதி வேண்டும். செவிலியர்களின் அலட்சியப் போக்கினை சரி செய்து செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். உடனடியாக ரத்தப் பரிசோதனை மருத்துவரை நியமித்திட வேண்டும்.
கோவில்பட்டி பகுதியில் பிரதான தொழிலாக விளங்கும் தீப்பெட்டி தொழிலை பாதுகாப்பதற்கு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் ரூபாய் 20க்கும் கீழே விற்பனை செய்யும் லைட்டர்களை விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், 50 சதவீதம் தீப்பெட்டி தொழில் மட்டுமே பாதுகாக்கப் படுகிறது. தீப்பெட்டி தொழிலை முழுமையாக பாதுகாக்க வெளி நாட்டுகளில் இருந்து இறக்குமதி செய்யும் லைட்டர்களை முழுவதுமாக தடை செய்ய வேண்டும்.
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட கணக்கில் வராத குடிநீர் இணைப்புகள் உள்ளன. மேலும் கோவில்பட்டியில் உள்ள திருமண மண்டபங்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், நகராட்சிக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. ஆகவே, கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் இணைப்புகளை ஆய்வு செய்து கணக்கில் வராத இணைப்புகளை கணக்கில் கொண்டு வந்து திருமணமண்டபங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு முறைப்படி குடிநீர் வழங்கி கோவில்பட்டி மக்களுக்கு தினமும் சுத்தமான சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூடுதல் பேருந்து நிலையத்திற்கு சென்னையில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்திற்குள் வராமல் பயணிகளை தேசிய நெடுஞ்சாலையில் நடுவழியிலேயே இறக்கி விடுவதால் பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு பொதுமக்கள் மிகவும் திண்டாடுகின்றனர். ஆகவே போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணித்து ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கூடுதல் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 17 பேருக்கு தமிழக அரசு நினைவுத்துண் எழுப்பி அரசு விழா எடுக்க வேண்டும்.
ஊதிய உயர்வு கேட்டு தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இறந்த தினமான ஜூலை 23ம் தேதி தாமிரபரணிக்கு 50 க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.