முதலமைச்சருக்கு வக்காலத்து வாங்குவது என்று கூட்டணிக் கட்சிகள் நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்
தி.மு.க அரசின் தவறான முடிவுகளுக்குத் தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு எழும்போது எல்லாம் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த கூட்டணி கட்சிகள் முயற்சிப்பது ஏன்? என்றும், தி.மு.க அரசை வெளி சக்திகள் இயக்குகிறதா? என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களை விநியோகிக்க சிறப்பு அனுமதி அளிக்கும் அரசாணையை ஒரேநாளில் தி.மு.க அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதுபோல, 12 மணி நேரம் வேலை சட்டத்தையும் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுபோல அரசாணையை வெளியிட்டுவிட்டுத் திரும்பப் பெறுவது ஏற்கனவே நடந்துள்ளது. தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறு எதுவும் இருக்க முடியாது.
திருமண மண்டபங்களில், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களுக்கு அனுமதி என்ற முடிவை, தமிழ் கலாசாரத்தை நன்கறிந்த ஒருவரால் நிச்சயமாக எடுத்திருக்கவே முடியாது. ஏழை, நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வியலை அறிந்திராத ஓர் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதற்கு இந்த அரசாணையே சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இதுதொடர்பாக தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ள கடும் கொந்தளிப்பு காரணமாகவே, தி.மு.க அரசை இந்த அளவு பணிய வைத்துள்ளது.
ஒரு பக்கம் சட்டப்பேரவையில் 500 மதுக்கடைகளைக் குறைப்போம் என்று அறிவித்துவிட்டு மறுபக்கம் மதுவை ஆறாக ஓட விடும் திட்டத்தை அறிவித்து மக்களை முட்டாள் ஆக்க நினைத்துள்ளது தி.மு.க அரசு. இது தகவல் தொழில் நுட்ப புரட்சி யுகம். இப்போது ஏமாற்று வேலை மக்களிடம் எடுபடாது. உண்மையை ஒரு நொடியில் மக்கள் உணர்ந்து விடுவார்கள்.
தி.மு.க அரசின் தவறான முடிவுகளுக்கு தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு எழும்போது எல்லாம், முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக, முதலமைச்சரை சந்தித்துக் கோரிக்கை விடுப்பது, கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து முதலமைச்சருக்கு வக்காலத்து வாங்குவது என்று ஒரு நாடகத்தை ஒவ்வொரு முறையும் அரங்கேற்றி வருகின்றனர்.
வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க-விடம் இருந்து அதிக தொகுதிகளைப் பெற வேண்டும். கடந்த லோக்சபா தேர்தலைப் போலவே தி.மு.க-விடம் இருந்து ஆதாயம் அடைய வேண்டும் என்ற கவலை தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளுக்கு இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக மக்களை ஏமாற்ற நினைத்தால் அது இனி எடுபடாது.
முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடந்து விட்டது என்றால் தமிழகத்தில் உள்ள, தி.மு.க அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறதா? அல்லது வெளியில் இருந்து வேறு ஏதாவது சக்திகள் அரசை இயக்குகிறதா? என்று சந்தேகம் எழுகிறது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.