12 மணி நேரம் வேலை செய்ய மனிதன் ஒன்றும் மிஷின் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
நிதி அமைச்சர் பேசியதாக வெளியாகி உள்ள ஆடியோ உண்மையானது தானா என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,"சமீபத்தில் சமூக வலைதளங்களில் வரும் நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையானது தானா என்பதை விளக்க வேண்டும். முப்பதாயிரம் கோடி விவகாரத்தை நாங்கள் கவர்னரிடம் புகார் அளிப்போம்.மத்திய அரசு இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.
இந்த ஆட்சியில் தி.மு.க அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை.எங்கள் மீது எவ்வாறெல்லாம் வழக்கு தொடுக்க முற்பட்டார்கள் என்றும் அனைவருக்கும் தெரியும். முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் அறிக்கை கொடுப்பவர்.இந்த ஆடியோ விவகாரம் குறித்து ஏன்? அறிக்கை கொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் 12 மணி நேர வேலை நேர சட்ட மசோதாவை எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்தவர்கள்,தற்போது அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள்.அதற்கு அவர்களின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த அரசு முதலாளிகளுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டது.ஒரு தொழிலாளிக்கு எட்டு மணி நேரம் வேலை, 8 மணி நேர உறக்கம் மற்றும் ஓய்வு என்று இருக்க வேண்டும்.12 மணி நேரம் வேலை செய்ய மனிதன் ஒன்றும் மிஷின் அல்ல என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கொடநாடு கொலை வழக்கில் மர்மம் இருப்பது உண்மை.எங்கள் அரசு தான் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தது நடவடிக்கை எடுத்தது.ஆனால் அந்தப் பயங்கரச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஜாமீன் கொடுத்தது அவர்களுக்காக வாதாடியது தி.மு.க என்றும் தெரிவித்தார்.
மேலும், பா.ஜ.கவுடன் கூட்டணி தொடர்கிறது. கூட்டணி குறித்து நாங்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா போன்றவர்களிடம் தான் பேசுவோம்.வேற யாரைப் பற்றியும் பேச வேண்டியது இல்லை என்றும் தெரிவித்தார்.