எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. இது தான் திராவிட மாடல் ஆட்சியின் நிலைப்பாடு
தி.மு.க. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோவில், 30 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இந்த ஆடியோ குறித்து தமிழக ஆளுநரிடம் முறையிடுவோம். மேலும், இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வலியுறுத்துவோம் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கூறுகையில், தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது 12 மணி நேர வேலை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார். ஆனால், தற்போது, திமுக ஆளும் கட்சியாக வந்த பின்பு, 12 மணிநேர வேலை என்ற மசோதாவை கொண்டு வந்துள்ளனர்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. இது தான் திராவிட மாடல் ஆட்சியின் நிலைப்பாடு. 12 மணி நேரம் பணிபுரிய தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் அல்ல. 12 மணி நேர வேலை என்பது மனித வாழ்க்கைக்கு ஒத்துவராது. ஸ்விட்ச் போட்டால் இயங்குவது போன்றது அல்ல மனித வாழ்க்கை. திமுக கொண்டு வந்த 12 மணிநேர வேலை என்ற மசோதாவுக்கு தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதில், 30 ஆயிரம் கோடி தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இந்த ஆடியோ விவகாரம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம். மேலும், மத்திய அரசு விசாரிக்க வலியுறுத்துவோம் என்றார்.