எதிர்பாராத விதமாக தண்ணீரில் இருவரும் மூழ்கி இறந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது குழந்தைகள் புவனா மற்றும் விக்னேஷ். கடந்த மூன்று நாட்களாக பள்ளித் தேர்வு முடிந்து வீட்டில் இருந்தனர். இந்நிலையில் இன்று வீட்டிற்கு சமையல் செய்ய விறகு எடுக்க அக்கா, தம்பி இருவரும் அவர்களது வீட்டின் அருகே உள்ள பள்ளத்தூர் ஏரி கரைக்குச் சென்றுள்ளனர்.
வீட்டிற்குத் தேவையான விறகுகளைப் பெருக்கி கட்டி வைத்துள்ளனர். பின்னர் ஏரியில் தண்ணீர் இருப்பதால் குளிக்க ஆசைப்பட்டு தண்ணீரில் இறங்கியுள்ளனர். அதில் அக்கா தண்ணீரில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரிலிருந்து தத்தளித்துள்ளார். இதனைக் கண்ட தம்பி விக்னேஷ் அக்காவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக தண்ணீரில் இருவரும் மூழ்கி இறந்துள்ளனர்.
வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு குழந்தைகள் வராதது கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் காணவில்லை. பிறகு ஏரிக்கரை பகுதியில் அவரது உடைகள் மற்றும் காலணி இருப்பதைக் கண்டு தண்ணீரில் இறங்கி தேடி உள்ளனர். சுமார் 3 மணி நேரத் தேடுதலுக்கு பின்னர் குழந்தைகள் இருவரையும் சடலமாக மீட்டுள்ளனர். சடலங்களை கைப்பற்றி உறவினர்கள் கதறி அழுத நிலையில், இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் தண்ணீரில் மூழ்கி பலியான இரண்டு குழந்தைகள் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக மத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா -தம்பி இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.