அனுமதியில்லாத கல்லூரியின் சான்றிதழ் வெறும் காகிதமாக மட்டுமே இருக்கும்.
விருதுநகரில் உள்ள கலசலிங்கம் கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர், கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி செயலாளர் ஸ்ரீதரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ’’எங்களது கல்லூரிக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் 2021-22ம் ஆண்டிற்கான ஆசிரியர் பயிற்சி வகுப்பு அனுமதி வழங்க வேண்டும். 21-22 ஆண்டு முதல் மற்றும் இரண்டாம் செமஸ்டர் மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’’எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவில், '’கல்வியியல் கல்லூரியில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததால் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பின்னர் கல்லூரிக்கான அனுமதியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் 2021ல் திரும்ப பெற்றுள்ளது. ஆனால், இதனை எதிர்த்து மனு செய்யவில்லை. கல்லூரிக்கு அனுமதியில்லாத நிலையில் 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பி.எட் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதன்பிறகு அனுமதியின்றி மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு முன்மாதிரியான ஒழுக்கம் கற்பித்து வழிகாட்டியாக விளங்க வேண்டிய ஆசிரியர் பணிக்குரியவர்களை ஒழுக்கம் இல்லாமல் நடத்தியுள்ளனர். அனுமதியின்றி 100 மாணவர்களைச் சேர்த்துள்ள நிலையில், தற்போது இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர். மாணவர்கள் மீதான அனுதாபத்தைக் காட்டி அனுமதி பெற முயல்கின்றனர். 4 செமஸ்டர்களைக் கொண்ட படிப்பில் இதுவரை ஒரு செமஸ்டரைக் கூட மாணவர்கள் எழுதவில்லை. கொரோனவை காரணமாகக் கூறி ஆணையத்தில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகவில்லை.
கல்லூரிக்கு எந்தவித அனுமதியும் இல்லாமல் கல்லூரி நிர்வாகம் எந்த மனசாட்சியுடன் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதன் விளைவை மனுதாரர் அனுபவிக்க வேண்டும். ஏமாற்றி மாணவர்களிடம் பணம் வசூலிப்பதே கல்லூரியின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தால் கல்லூரி வங்கிக் கணக்கு வளம் பெற்றுள்ளது’’என வேதனை தெரிவித்த நீதிபதி, ’’மாணவர்களிடம் கட்டணம் வசூலித்துவிட்டு, அவர்களை வேறு எந்த கல்லூரிக்கும் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர்.
அனுமதியில்லாத கல்லூரியில் படித்த மாணவர்களின் சான்றிதழ் தகுதியற்றது எனத் தெரிந்தும் 100 பேரைச் சேர்த்துள்ளனர். விதிகளை பின்பற்றாமல் மீறிச்செயல்பட்ட மனுதாரரை இந்த நீதிமன்றம் பாதுகாக்க முடியாது. மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது மட்டுமே நோக்கமாக இருந்துள்ளது. மாணவர்கள் நலனை பார்க்காமல், தங்களின் சொந்த நலனுக்காக தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி, மனுதாரர் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். அனுமதியில்லாத கல்லூரியின் சான்றிதழ் வெறும் காகிதமாக மட்டுமே இருக்கும்.
எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தப் பணத்தை உயர்நீதிமன்ற கிளை சட்டப் பணிகள் ஆணையத்திற்கு செலுத்த வேண்டும். விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத் தலைவர், சம்பந்தப்பட்ட 100 மாணவர்களையும் அணுகி அவர்கள் கல்லூரிக்கு செலுத்திய கட்டணத்தைப் பெற்றுத் தர உதவ வேண்டும். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக அந்த மாணவர்கள் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம்’’ என உத்தரவிட்டு கல்லூரியின் மனுவை தள்ளுபடி செய்தார்.