அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல்துறையினருக்கு அறிவுரை
தமிழகத்தில் வரும் 16ம் தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பேரணி நடத்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. ஆனால், சட்டம் ஒழுங்கு விவகாரத்தைக் காரணம் காட்டி, இதற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நாடினர்.
இதைத்தொடர்ந்து 6 இடங்களைத் தவிர மற்ற 44 இடங்களில் பாதுகாப்புடன் உள்ளரங்கில் கூட்டமாக நடத்த தனி நீதிபதி அனுமதி அளித்தார். மேலும், பேரணியைச் சுற்றுச்சுவருக்குள் நடத்த வேண்டும் என்றும் நீதிபதி கட்டுப்பாடு விதித்தார். இதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 'பொதுச்சாலைகளில் பேரணி நடத்துவது என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை ஆகும். எனவே சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றால், அதனைச் சரி செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை. இதுபோன்ற அணிவகுப்புகள் கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, முழுமையாகத் தடை செய்ய முடியாது' என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், 'ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்குத் தேவையான பாதுகாப்புகளை வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டு, பேரணி நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
பின்னர், தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். இதனால் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி வரும் 16ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க மாவட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது. பேரணி நடைபெறும் தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநகரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போட வேண்டும் என்று காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.