தேர்தலில் பா.ஜ.க 100 சதவீதம் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என, கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் அசோக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வருகின்ற மே 10 ஆம் தேதி 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ,கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் அசோக் தனது சொந்த தொகுதியான பத்மநாப நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே .சிவகுமார் போட்டியிடும் ராம் நகர் மாவட்டம் கனகபுரா தொகுதியிலும் அசோக் போட்டியிட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அமைச்சர் அசோக் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு எனது முதற்கடவுளான அண்ணாமலையாரை தரிசித்து சென்ற பிறகுதான் வேட்பு மனு தாக்கல் செய்வேன்.
அதன் அடிப்படையில் தான் நானும் சக எம்.எல்.ஏ-க்களும் இன்று அண்ணாமலையாரிடம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்’ என ஆசி பெற வந்தோம். மத்தியிலும், மாநிலத்திலும் டபுள் இஞ்சின் அரசாக பா.ஜ.க உள்ளது. மீண்டும் கர்நாடகத்தில் பாஜக அரசு வெற்றி பெற வேண்டி, நானும் எனது கட்சியினரும் அண்ணாமலையாரிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக இங்கு வந்துள்ளோம்’ என கூறினார்.
கனகபுரா தொகுதியில் நான் போட்டியிடுவது தலைமை எடுத்த முடிவு. தலைமை எடுக்கும் முடிவே இறுதி. சிப்பாய் என்பதால் கட்சித் தலைமை எடுத்த முடிவை நான் மதித்து போட்டியிடுகிறேன். தற்பொழுது வருவாய் துறை அமைச்சராக நான் உள்ளதால் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள டி.கே சிவக்குமாரை எதிர்த்து போட்டியிடுவதற்காக என்னை கட்சி தலைமை நிறுத்தியுள்ளது.
இந்த தேர்தலில் 100% நான் வெற்றி பெறுவேன். நான் தேர்தலில் 6 முறை வெற்றி பெற்றுள்ளேன். இதுதான் முதல் முறை இரண்டு தொகுதிகளில் நிற்பது. கட்சி தலைமை வழிகாட்டுதலின்படிதான் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் பா.ஜ.க 100 சதவீதம் தனி பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்.
கர்நாடக மாநில சாலை வளர்ச்சிக்கும், வேளாண் வளர்ச்சிக்கும், மருத்துவ துறையின் வளர்ச்சிக்கும் மோடி அரசாங்கம் பல திட்டங்களையும், பல்வேறு வகையில் நிதியுதவிகளையும் செய்துள்ளது. ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது இயற்கை. இது ஒன்றும் புதிதல்ல.
தேர்தல் ஆணையம் பா.ஜ.கவோ, காங்கிரசோ அல்லது மற்ற கட்சிகளோ கிடையாது அவர்கள் சுதந்திரமானவர்கள். முறையான முடிவுகளை மேற்கொள்வார்கள். வருமான வரி, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் சுதந்திரமான அமைப்புகள். மத்தியில் மன்மோகன் சிங் ஆட்சியில் இருக்கும்பொழுதும் கர்நாடக மாநிலத்தில் பல சோதனைகள் நடைபெற்றது. இதுபோன்ற சோதனைகள் இயற்கையானது’ என தெரிவித்தார்.