பிரதமர் மோடி வரும் 8ம் தேதி தமிழகம் வருகிறார்
பிரதமர் மோடி வரும் 8ம் தேதி தமிழகம் வரும் நிலையில், நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்தித்துள்ள நிலையில், இன்று பா.ஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் சந்தித்துப் பேசினார்.
அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி குறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் வேறுவேறு கருத்துக்களைத் தெரிவித்தனர். இதனிடையே, சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், பா.ஜ.க - அ.தி.மு.க. கூட்டணி என்பது இறுதியானது அல்லது உறுதியானது என்று இப்போது எதுவுமே கூறமுடியாது. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளது. அப்படி இருக்கையில், இப்போது தேர்தல் கூட்டணி குறித்தோ அல்லது போட்டியிடப்போகும் தொகுதிகள் குறித்து இறுதியான முடிவு எதுவும் எடுக்கமுடியாது.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அமித் ஷாவிடம் 2 மணி நேரம் பேசினேன். அந்த வகையில், நாங்கள் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்குத் தயாராக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அதைநோக்கி சென்றுகொண்டுள்ளோம். தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெறுவதால் எந்தப் பயனும் இல்லை என்பது எனது கருத்து. நாடாளுமன்ற தேர்தலில் எனக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் தூய்மையான அரசியலை முன்னெடுப்பேன்' என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உள்ளதா? இல்லையா? என்று சிலர் சர்ச்சையைக் கிளப்பி வந்தனர்.ஆனால், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் உறுதிப்படுத்தினார். அதேபோல, இதே கருத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளார். இதனிடையே, அ.தி.மு.க. தலைமையைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நீதிமன்றம் மூலம் போராடி வருகின்றனர்.
பிரதமர் மோடி வரும் 8ம் தேதி தமிழகம் வருகிறார். இந்த நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தம்பிதுரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழக அரசியல் கூட்டணி மற்றும் சூழல் விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்தித்துப் பேசிய நிலையில், தற்போது அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.