'சட்டவிதிகளை எடப்பாடி மதிக்கவில்லை' -சிவகங்கையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தீர்மானம்

'சட்டவிதிகளை எடப்பாடி மதிக்கவில்லை' -சிவகங்கையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தீர்மானம்
'சட்டவிதிகளை எடப்பாடி மதிக்கவில்லை' -சிவகங்கையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தீர்மானம்

அமைப்புகளின் மாடங்களும், முகவரிகளும் மாறுகிறதே தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியின் சட்ட விதிகளை மதிக்காமல் பொதுச்செயலாளர் என சுயபட்டாபிஷேகம் நடத்திக் கொண்டதாக எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டக் கழகம் சார்பில் 06-04-2023 அன்று சிவகங்கையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
அதில், ஒரு தொண்டனும், தலைமைக்கு போட்டியிட முடியும். தொண்டர்கள் மட்டுமே கட்சியின் தலைமையை தேர்ந்து எடுக்க வேண்டும் என்னும் கழக நிறுவனர்  எம். ஜி.ஆர் வகுத்துக் கொடுத்த கட்சியின் மாற்றக் கூடாத அடிப்படை சட்டவிதிகளை துச்சமென தூக்கி எறிந்து விட்டு பொதுக்குழு என்னும் புறவாசல் வழியே கட்சியை அபகரிக்கவும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின் பினாமிகளாக மாறிவிட்ட மாவட்டச் செயலாளர்களை வைத்துக் கொண்டு அண்ணா தி.மு.க.வின் அதிபராக தன்னை பிரகடனம் செய்து கொள்ள முயற்சிக்கிற எடப்பாடி பழனிச்சாமியின் ஜனநாயக விரோத போக்கை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
தொண்டர்களின் உரிமையை பறித்து அதனை, அந்த உரிமையை தான் கொள்முதல் செய்து வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சியின் விதிகளுக்கு மாறாக எடப்பாடி மடைமாற்றம் செய்வதை இக் கூட்டம் கடுமையாக எதிர்க்கிறது.
தீர்மானம் எண் 2. கழகத்தின் அடிப்படை தொண்டர்களால் தேர்வு செய்யப் பட்ட கழக ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 2026 டிசம்பர் வரைக்குமான ஆயுட் காலத்தைக் கொண்டிருக்கும் நிலையில் அந்த தொண்டர்களின் தேர்வை திடீரென கருக்கலைப்பு செய்துவிட்டு எடப்பாடி தன்னை பொதுச் செயலாளராக அறிவித்துக் கொண்டிருப்பது ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிற போக்கு. 
இதற்கு, எம்.ஜி.ஆரின் சட்ட விதிகளை சரிவர உள்வாங்கிக் கொள்ளாத நீதிமன்ற தீர்ப்புகளையும், தனது கத்தைப் பணத்தால் வளைத்து வைத்திரும் மாவடச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்கிற நிர்வாக ரீதியிலான எண்ணிக்கை பெரும்பாண்மையையும் ஊர் உலகுக்கு காட்டி எடப்பாடி பழனிசாமி
தப்பிக்கப் பார்ப்பது கைதேர்ந்த ஒரு ஜனநாக கொள்ளை.
தலைமைப் பதவிக்கு தன்னைவிட தொண்டர்கள் செல்வாக்கும், ஜெயலலிதாவின் அபிமானமும், அவராலான அடையாளமும் கொண்டிருப்பவர் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பி.எஸ் என்பதற்காகவே அவரை கட்சியில் இருந்தே நீக்குவதாக எடப்பாடி அறிவித்து விட்டு தன்னை பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்துவிட்டதாக அறிவித்துக் கொள்வது கோல்கீப்பரை கட்டிப் போட்டு விட்டு கோல் அடித்து மகிழுகிற தனமாகும். எனவே எடப்பாடியின் இத்தகையை கட்சியின் விதிகளுக்கும், தருமத்துக்கும் எதிரான முறைகேட்டு முடிசூட்டலை நிராகரிப்பதோடு அவரது நீதிக்கு புறம்பான அபகரிப்பை சிவகங்கை மாவட்டன கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
மைதானத்தில் உள்ள நடுவர்களின் முடிவுகள் பல தருணங்களில் தவறாகி விடும் போது மூன்றாம் நடுவரின் பார்வைக்கு அது முன்னெடுக்கப்பட்டு, சாட்சிகளோடும் காட்சிகளோடும் தெளிவான முடிவை அந்த மூன்றாம் நடுவர் வழங்குவது விளையாட்டில் மட்டுமல்ல அரசியலிலும் உண்டு என்பதை நம்பிக்கையாக கொண்டு நீதிமன்றம், தேர்தல் ஆணையம் இதனைக் கடந்த மூன்றாம் நடுவராக மக்கள் மன்றத்தையும் உளமார ஏற்று எடப்பாடியின் சதிகளையும் எம்.ஜி.ஆரின் விதிகளையும் முன்வைத்து அந்த மூன்று களங்களிலும் எடப்பாடிக்கு எதிராக அயாரது போராடி வருகிற தொண்டர்களின் உரிமைக் காவலர்  ஓ.பி.எஸ்-க்கு சிவகங்கை மாவட்டக் கழகம் தனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
காலமகள் தந்திட்ட கோலமகள் குடியிருந்த கொடநாடு கோவிலில் நடந்த கொலை கொள்ளை விவகாரங்களை ஆட்சிக்கு வந்து தொன்னூறு நாட்களுக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை தண்டிப்போம் என்று தனது தேர்தல் அறிக்கையிலேயே அச்சிட்டு கொடுத்த தி.மு.க.ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்று வரை விசாரணை அமைப்புகளின் மாடங்களும், முகவரிகளும் மாறுகிறதே தவிர வேறு எந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லை.
மேலும் ஆளும் தி.மு.க. கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தை தனது அரசியல் பேரங்களுக்கான திரைமறைவு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறதோ என்கிற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. எனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணை நிலை என்ன என்பதை பெற்று இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்னும் கோரிக்கையை நீதி மன்றத்தின் மூலம் முன்னெடுக்க சிவகங்கை மாவட்டக் கழகம்
 தலைமையின் அனுமதியை பெற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.
ஆன்லைன் ரம்மி என்கிற வலைதளச் சூதாட்டம் ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருவதை முன்வைத்து அதனை தமிழகத்தில் தடைசெய்ய வேண்டி தமிழக சட்டமன்றத்தில் ஆளும் அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் மீது முன்னாள் முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளருமான மாண்புமிகு ஓ.பி.எஸ். உரையாற்றியதற்காக சட்டமன்றத்தில் எடப்பாடியும் அவரது தூண்டுதலின் பேரில் அவரது அபகரிப்பு கும்பலும் ஓ.பி.எஸை பேச அனுமதித்தது தவறு எனக் கூறியது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழக முதல்வராக மூன்று முறை அம்மாவின் ஆட்சியை நடத்திய பெருமையும் அனுபவமும் கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸை பேசக்கூடாது என ஆட்சேபம் தெரிவிப்பதற்கு எடப்பாடிக்கு தகுதி கிடையாது. எனவே  மாண்புகள் ஏராளம் கொண்ட சட்டசபைக்குள் எடப்பாடி கும்பலின்  அராஜாகத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
கழக நிறுவனர் எம்.ஜி.ஆர் வகுத்த கட்சியின் சட்ட விதிகளின் மீது மலர் வளையம் வைத்து விட்டு தான் பொதுச் செயலாளர் ஆகிவிட்டாதாக மலர் செண்டுகளை வாங்கித் திரிகிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போல தொப்பியும், கண்ணாடியும் போட்டுக் கொண்டும் அரசியல் செய்து வருகிறார். இந்த அபகரிப்புக்கு தொண்டர்களின் எதிர்ப்பை காட்டும் விதமாகவும் புரட்சித் தலைவர் புரட்சி தலைவி அம்மா ஆகியோரது பிறந்த நாள் மற்றும் கழகத்தின் பொன்விழா ஆகியவற்றை கொண்டாடும் விதமாகவும் அ.தி.மு.க. சார்பில் விரைவில் நடக்க இருக்கும் முப்பெரும் விழா மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பத்தாயிரம் தொண்டர்களோடு கலந்து கொள்வது என சிவகங்கை மாவட்டக் கழகம் முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறது.
கட்சியின் விதிகளை தனி ஒருவரின் அதிகாரப் பித்துக்காக திருத்துவது, கட்சியை நிறுவிய மக்கள் திலகம் எம்ஜிஆர் சொன்ன மாற்றக் கூடாத விதிகளை மாற்றி தொண்டர்களின் உரிமையை பறிப்பது, பொதுக்குழுவில் கலந்து விட்டு ஒரு முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஒருவர் மீதே தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்க முயற்சிப்பது, தலைமைக் கழகத்திற்கு வரும் போது ஆறு மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்துவது, காசை வைத்து கட்சியை அபகரிப்பது என ஜனநாயகத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்து தொண்டர்களின் உரிமையை பறிக்கும் எடப்பாடியின் அரசியலை அங்கீகரிப்பதும், ஆக்ரமிப்பு காஷ்மீரை அங்கரீப்பதும் ஒன்று தான் என்பதால் இது போன்ற பட்டப் பகல் அபகரிப்புகளை தடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்டக் கழகம் வேண்டுகோளாக முன்வைக்கிறது’’என ஏழு தீர்மானங்களை முன் வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com