அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்
கோவை சாய்பாபா காலணி பகுதியில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும்,கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை மாநகராட்சியைப் பொறுத்த வரை குடிநீர் பிரச்னையால் பெரிய பாதிப்பு இருந்து வருகின்றது.பல்வேறு பகுதிகளில் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவாணி அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் எனச் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். பொது மக்களுக்கு லாரிகள் வாயிலாகத் தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வெயில் காலத்தின் ஆரம்பத்திலேயே குடிநீர் பிரச்சினை வருகின்றது. லாரிகள் வாயிலாகத் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அண்ணா மார்கெட் பகுதியில் நெடுஞ்சாலையைச் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடக்கத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
கொரொனா தொற்று குறித்து மக்களுக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கின்றது. மத்திய அரசும் வழிகாட்டுதல்களைக் கூறியுள்ளது.மாநில அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.தஞ்சாவூர் உட்படக் காவிரி டெல்டா பகுதிகளை அதிமுக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.அந்த பகுதிகளில் நிலக்கரி மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கினால், அதிலிருந்து விலக்கு பெற மாநில அரசு தான் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. அதேசமயம் நாட்டில் எரிபொருள் தேவை என்பது அவசியம். எரிப்பொருட்களை இறக்குமதி செய்வதால் தான் நம்மால் உரிய விலை நிர்ணயம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்தத் திட்டங்களை வேளாண் மண்டலத்தில் செயல்படுத்த முடியுமா என்பதை மாநில அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.கூட்டணியை தேசிய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். இதில் எந்தக் குழப்பமும் இல்லை.இன்றைய தேதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருப்பதைத் தலைவர்கள் உறுதி செய்து இருக்கின்றனர்.
கலாஷேத்திரா விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தான் முதலில் வந்து விசாரணை நடத்தியது.இந்த விவகாரத்தில் யார் தவறு செய்து இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளதை, நாங்கள் வரவேற்கின்றோம்.புகார் தெரிவிக்கும் மாணவிகளின் பெயர், புகைப்படங்கள் வெளியிடப்படக் கூடாது. இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்க வேண்டும்.
பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலைத் தடுக்க விசாகா கமிட்டி அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட வேண்டும். நிறைய இடங்களில் விசாகா கமிட்டி அமைக்காமல் இருக்கின்றனர்.விசாகா கமிட்டி அமைக்கப்படுவதைச் சமூக நலத்துறை உறுதிப்படுத்த வேண்டும்.
ராகுல் காந்தி விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் பா.ஜ.கவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எல்லோருக்கும் இருக்கும் உரிமையைப் போலச் சட்ட ரீதியாகப் போராடும் உரிமை ராகுல் காந்திக்கும் இருக்கின்றது.பிரதமர் மீது பாய்வதில் எந்த அர்த்தமும் இல்லை” என்றார்.