இது எங்கள் உள்விவகாரம். உச்ச நீதிமன்றத்திற்கு மேல் யாரும் இல்லை.
ராகுல் காந்தியின் நீதிமன்ற வழக்கை வாஷிங்டன் கவனித்து வருவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது இந்திய ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெள்ளைமாளிகை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேல், 'சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயக நாட்டின் அடிப்படை கூறாகும். இந்திய நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் ராகுல்காந்தியின் வழக்கை கவனித்து வருகிறோம்.
அமெரிக்க, நல்லுறவைப் பேணும் நாடுகளின் எதிர்க்கட்சிகளுடனும் சுமுகமான உறவைப் பேணவே விரும்புகிறது. இந்தியாவுடனான ஈடுபாடுகளில், ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்பது, எங்கள் இரு ஜனநாயகங்களையும் வலுப்படுத்துவதற்கான திறவுகோலாக நாங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்துகிறோம்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ’’காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம். அமெரிக்க அதிகாரி ஒரு பொதுவான அறிக்கையை வெளியிட்டதையும் கவனித்து வருகிறோம். இது எங்கள் உள்விவகாரம். உச்ச நீதிமன்றத்திற்கு மேல் யாரும் இல்லை. நீதித்துறை மற்றும் அரசியலமைப்புகள் உள்ளன. அவர்கள் (அமெரிக்கா) பொதுவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்" என்று அவர் கூறினார்.