’தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது. இருந்தபோதும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஆகையால், பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’என டி.ஜி.பி., சைலேந்திரபாபு வலியுறுத்தி உள்ளார்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘’புத்தகமும், பேனாவும் மாணவர்களின் மிகப்பெரிய ஆயுதம். அதனைச் சரியாக பயன்படுத்த வேண்டும். பெண்கள் படிப்பை சுயமாகத் தேர்வு செய்ய வேண்டும்.
சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்த போது அவை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாவட்டங்களாக உள்ளன. தமிழ் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்14,480 வழக்குகளும், பாலியல் புகார் தொடர்பாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் போக்சோ வழக்குகள் 22,413 பதிவு செய்யப்பட்டுள்ளன. வரதட்சனை கொடுமையாக 15,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை ரூ.21 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 242 பெண் காவல் நிலையங்கள் உள்ளன. இதில், பெண் காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். பெண்களுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்திருப்பதால், பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’என அவர் கேட்டுக் கொண்டார்.