அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பில் நீதிபதி குமரேஷ் பாபு, ‘சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்’ என கூறியுள்ளார்.
மேலும் ‘அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிவுகளை வெளியிட தடை இல்லை’ என தீர்ப்பில் கூறியுள்ளதோடு ‘அ.தி.மு.க உறுப்பினர்களை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது’ என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்நிலையில் அ.தி.மு.க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தனி நீதிபதி தீர்ப்பை அடுத்து நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை விசாரிக்க இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளனர்.