அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு: ‘பொதுச்செயலாளராக எடப்பாடிக்கு தடை இல்லை’ -நீதிமன்றம் தீர்ப்பு

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு: ‘பொதுச்செயலாளராக எடப்பாடிக்கு தடை இல்லை’ -நீதிமன்றம் தீர்ப்பு
அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு: ‘பொதுச்செயலாளராக எடப்பாடிக்கு தடை இல்லை’ -நீதிமன்றம் தீர்ப்பு

அ.தி.மு.க வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் அ.தி.மு.க மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி கே.குமரேஷ் பாபு உத்தரவிட்டு இருந்தார்.

இதனிடையே அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி இவர்கள் மூவருடன் சேர்ந்து ஒ.பன்னீர்செல்வமும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள்  நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது ‘எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது’ என்று வாதிடப்பட்டது. 

மேலும் ‘தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவருமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்டவர்கள்தான்’ என்றும், ‘எங்களை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் தொடர்பாக ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாத நிலையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்’ என்றும் குற்றம்சாட்டப்பட்டது. 

அதேப்போல், ‘இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெறுவதற்காக தங்களை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றிவிட்டு பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது ஒற்றை தலைமையை உருவாக்கும் நோக்கம் மட்டுமல்ல’ என்றும், ‘போட்டியே இல்லாமல் அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கொண்டு அறிவிக்கப்பட்டது’ என்றும் குற்றம்சாட்டபட்டது.

அதற்கு அ.தி.மு.க தரப்பில் ‘எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தை சூறையாடியதுமே ஜூலை 11 பொதுக்குழுவில் அவர்களை நீக்க தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்தது. கட்சியினரின் குரலாக பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது’ என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், ‘பதவிகளை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதி என அறிவிக்கவில்லை’ என்றும், ‘கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன’ என்றும் வாதிடப்பட்டது. 

அதேப்போல், ‘ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது அவரது சகோதரர் ராஜா மற்றும் கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகி பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோரை நீக்கும் முன் எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை. கட்சியைவிட்டு நீக்க ஒரே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது’ என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்குகளின் மீதான தீர்ப்பு குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஆகிய 2 வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி காலை 10.30 மணிக்கு நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ‘சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்’ என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் ‘அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிவுகளை வெளியிட தடை இல்லை’ என தீர்ப்பில் கூறியுள்ளதோடு ‘அ.தி.மு.க உறுப்பினர்களை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது’ என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com