ஏப்ரல் 14தேதி அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்-அண்ணாமலை
கூட்டணியை பொறுத்தவரை பாராளுமன்ற குழு தான் முடிவெடுக்கும்.இதில் கூச்சலோ, குழப்பமோ எதுவும் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் "சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் டிஃபர்மேஷன் வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மக்கள் பிரதிநிதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைகிறதோ அவருடைய பதவி காலம் சஸ்பெண்ட் ஆகிறது. பிகார், உத்தரபிரதேசங்களில் சில எம்.பி.களுக்கு இது போன்ற பிரச்சனைகள் உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து மாற்றி பேசி வருகிறார்கள். 'இந்தியாவில் உள்ள எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்று உள்ளது' என 2019 ல் ராகுல் காந்தி சொன்னார் என்பதற்கு தீர்ப்பு வந்துள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் ஜே.பி.நட்டாவை 2 முறை சந்தித்துள்ளேன். கூட்டணியை பொறுத்தவரை பாராளுமன்றக் குழு தான் முடிவெடுக்கும். புதிய கூட்டணி பொருத்தவரை கூச்சலோ, குழப்பமோ எதுவும் இல்லை. பா.ஜ.க.,வுக்கும், எனக்கும் எந்தக் கட்சியின் மீதும், கட்சி தலைவர்கள் மீதும் எந்தக் கோபங்களும் இல்லை. கூட்டணியில் இருந்தால் அது தான் தர்மம். அ.தி.மு.க.,வில் பலமுறை முதல்வராக இருந்துள்ள அவர்கள் வளர வேண்டும் என நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. கூட்டணிக்குள் சிறு சிறு சிராய்ப்புகள் வருவது சகஜம் தான்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனியார் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தியை விட, மு.க.ஸ்டாலின் சிறந்த பிரதமர் வேட்பாளர் என்று கூறியிருந்தது அவருடைய நிலைப்பாடு. ஆன்லைன் சூதாட்ட மசோதா நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ட்ரோல் வீடியோ, மீம் வீடியோக்களுக்கு தமிழக அரசு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். முதல்வர் ஜனநாயகத்தை பற்றிப் பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது. ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு முதல்வருக்கு எந்தத் தகுதியும் தகுதி இல்லை.
அண்டை மாநிலங்களில் பால் கொள்முதல் விலை 48 ரூபாய் தமிழகத்தில் 33 ரூபாய் உள்ளது. அனைத்துமே தனியார் பால் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. அமைச்சர் நாசர் கனவு உலகத்தில் உள்ளார். பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு நாங்கள் நம்பிக்கை கொடுத்துள்ளோம். கோட்டையை நோக்கி இதை பெரிய அளவில் எடுத்துச் செல்வோம். பால் விலையை ஏற்றிவிட்டு, கொள்முதல் விலையை கூட்டுகிறார்கள்.
மேக்கப் போட்டுக் கொண்டு அரசு தங்கள் வாழ்க்கையை நடத்துகிறது. மேக்கப்பை கலைத்தால் உள்ளே ஒன்றும் இருக்காது. கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியில் உள்ளது. காங்கிரஸின் இருண்ட காலத்தை கர்நாடக மக்கள் பார்த்துள்ளனர். கடந்த 40 நாட்களில் பிரதமர் 11 முறை கர்நாடக வந்துள்ளார். ஆக்கபூர்வமான திட்டங்களை மத்திய அரசு வழங்கி கொண்டு வருகிறது. காங்கிரஸின் பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக ஆட்சிக்கு வரும். 140 சீட்டுகளை வெல்வோம் என்று நம்புகிறேன்.
'ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவில் ஏற்கனவே ஆளுநர் உச்ச நீதிமன்ற தீர்பில் எதுவும் சிக்கல்கள் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பி, சில மாற்றங்களை செய்ய சொல்லி இருந்தார். ஆனால், தமிழக அரசு தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல எந்தவித மாற்றமும் செய்யாமல் மீண்டும் அனுப்புகிறார்கள். அதனால், இந்த முறை ஆளுநர் கையெழுத்திட்டே ஆக வேண்டும். ஆளுநர் கையெழுத்திட்ட பிறகு 100% தரப்படும். அந்த நேரத்தில் அரசு வருத்தப்படும். அந்த நேரத்தில் சட்ட அமைச்சர் மக்களிடம் என்ன சொல்வார் என்று தான் காத்துக் கொண்டு கொண்டிருக்கிறோம்.
கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல பலமுறை சொல்லியும் எந்த வித மாற்றமும் செய்யாமல் இருப்பது திமுக அமைச்சர்களுக்கும், ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் வருகிறது. ஏப்ரல் 14தேதி அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். அ.தி.மு.க.,வின் உட்கட்சி பிரச்சனை குறித்து நான் கருத்து சொன்னால் சரியாக இருக்காது.
கமல் நன்றாக பேசும் போதே புரிவதில்லை. இதில் ராகுல் காந்தியுடன் பேசுகிறார். எனக்கு எதுவும் புரியவில்லை. மக்கள் நீதி மையம், காங்கிரஸ் கட்சியுடன் இணைகிறது என்று வெளியான விவகாரத்தை பொய்யான செய்தி என்று மக்கள் நீதி மையம் சார்பில் தெரிவித்தனர். ஆனால், கமல்ஹாசன் இன்று அதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டே இருக்கிறார்’’ என அவர் தெரிவித்தார்.