அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணை வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை முடிவடைந்து உள்ளது.
மனுக்களை பரிசீலனை செய்ததில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனு மட்டும் ஏற்கப்பட்டதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலி ஆனதாக கூறவில்லை.
இந்த பதவிகள் குறித்து நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.
எனவே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இந்த மனுவையும் விசாரிக்க வேண்டும் என, நீதிபதி குமரேஷ் பாபு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி பிரகாஷ் முறையிட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி புதன்கிழமையான இன்று 22ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி இருந்தார்.
அதன்படி இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.