இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன
தொழில் அதிபர் அதானி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விவகாரம் காரணமாக, ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியால் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாம் அமர்வு கடந்த 13ம் தேதி கூடியது. இந்த நிலையில், அதானி விவகாரத்தை பார்லிமெண்ட் தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து, நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
அதேபோல, வெளிநாட்டில் பேசும்போது ராகுல்காந்தி இந்தியாவை அவமதித்துவிட்டார், எனவே, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரு பக்கம் பா.ஜ.கவும் அதன் கூட்டணி கட்சிகளும், மறுபக்கம் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருவதால், இரண்டு அவைகளும் முடங்கியது.
இன்று காலையில் அவை துவங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே மீண்டும் அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கோரிக்கை காரணமாக, கடந்த 6 நாட்களாக அவை ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், இன்றும் 7வது நாளாக அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.