'இனி இதுபோன்று நடக்காது'" - திருச்சி சிவா-கே.என்.நேரு சந்திப்பில் என்ன நடந்தது?

'இனி இதுபோன்று நடக்காது'" - திருச்சி சிவா-கே.என்.நேரு சந்திப்பில் என்ன நடந்தது?
'இனி இதுபோன்று நடக்காது'" - திருச்சி சிவா-கே.என்.நேரு சந்திப்பில் என்ன நடந்தது?

"நான் உங்களைத் தேடி வந்துள்ளேன்" என நேரு சொல்ல, அதைக்கேட்டு திருச்சி சிவா நெகிழ்ந்து போனார்

திருச்சி தி.மு.க. சிவா எம்.பியின் வீடு மற்றும் கார், அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி சிவா வீட்டிற்கு இன்று நேரிடையாகச் சென்ற அமைச்சர் கே.என்.நேரு, சிவாவிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும், அவருக்கு ஆறுதல் கூறினார்.

திருச்சி எஸ்.பி.ஐ. காலனியில் இறகுப்பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக மார்ச் 15ம் தேதி அமைச்சர் நேரு வந்துள்ளார். அப்போது அமைச்சர் நேருவுக்கு திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் சிலர் கறுப்புக் கொடி காட்டியுள்ளனர். இதனால் கோபப்பட்ட நேருவின் ஆதரவாளர்கள், அவர்களைத் தாக்கியுள்ளனர்.

இதன் பின்னணியை விசாரித்தபோது, குடியிருப்புப் பகுதிகளில் மேம்பாட்டுக்காக விளையாட்டு மைதானம், பூங்கா, சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது ஆகிய பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மாநகராட்சி சார்பில் ஒரு பங்கு நிதி வழங்கப்படுகிறது. அதன் ஓர் அங்கமாக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கை திறந்து வைப்பதற்காக நேரு வந்திருக்கிறார்.

இந்த மைதானம் அமைந்துள்ள கன்டோன்மென்ட், சங்கம் ஹோட்டல் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் ஆபிஸர்ஸ் காலனி பகுதியில்தான் திருச்சி சிவாவின் வீடு அமைந்துள்ளது. ஆனால், விழா அழைப்பிதழிலோ கல்வெட்டிலோ சிவா பேர் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரப்பட்ட சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டியுள்ளனர். 

வழக்கமாக பொது இடங்களில் கோபத்தைக் காட்டும் அமைச்சர் கே.என்.நேரு, இந்தச் சம்பவத்தால் மேலும் கொந்தளித்தார். இறகுப் பந்து மைதானத்தைத் திறந்து வைத்துவிட்டு அவர் கோபமாகக் கிளம்பிவிட்டார். 

இதன்பின்னர், தி.மு.க-வினர் சிலர் திருச்சி சிவாவின் வீட்டுக்குள் புகுந்து ஜன்னல், நாற்காலி, வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியானது.

தொடர்ந்து, செசன்ஸ் கோர்ட் காவல்நிலையத்திலும் இரு தரப்பும் மோதிக் கொண்டது. ஆனால், இந்தச் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தபோது திருச்சி சிவா வீட்டில் இல்லை. அவர் பஹ்ரைனில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் 30 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, திருச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கும்போதே, 'யாராக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுங்கள்' என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.கவினர் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். 

இதனைத்தொடர்ந்து, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச் செல்வம், திருச்சி மாவட்ட தி.மு.க. பொருளாளர் துரைராஜ் மற்றும் 55-வது வட்ட செயலாளர் ராமதாஸ் ஆகியோரை தற்காலிகமாக நீக்கம் செய்து, பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில், திருச்சி எஸ்.பி.ஐ. காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு சென்றார். அங்கு தனி அறையில் வைத்து, அவரிடம் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், ஆறுதலும் கூறினார். "தலைவர் உங்களை பார்த்து பேசச் சொன்னார். அதனால்தான் நான் உங்களைத் தேடி வந்துள்ளேன்" என நேரு சொல்ல, அதைக்கேட்டு சிவா நெகிழ்ந்து போனார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "நடக்ககூடாதது நடந்துவிட்டது. இனிமேல் இதுபோல் நடக்காது" என உறுதியளித்தவர், நானும் சிவாவும் மனம் விட்டு பேசியுள்ளோம் என்றார். 

இதனைத் தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, "நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும்" என்றார்.

திருச்சி சிவா எம்.பி. - அமைச்சர் கே.என்.நேரு இடையே மோதல் போக்கு நீடித்தால், அது கட்சிக்குத்தான் இழப்புதான் என்றும், இதை பயன்படுத்தி, சிலர் அரசியல் செய்துவிடுவார்கள், விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், இருவரும் ஒருவராக இணைந்து செயல்படவேண்டும் என தி.மு.க. தலைமைக்கழகத்தில் இருந்து அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதனையடுத்து, இருதரப்பும் வெள்ளைக்கொடியை பறக்கவிட்டுள்ளது. இதனையடுத்து, திருச்சி தி.மு.கவில் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

-ஷானு

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com