"ஜனநாயகத்திற்கு இங்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்று விட்டது"
ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது 6 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் சூழலில் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். மேலும் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திலும் தேமுதிக 4-வது இடத்திலும் உள்ளது. நாம் தமிழர் கவனம் பெறும் வகையில் வாக்குகள் பெற்றுள்ள நிலையில், தேமுதிக கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரியில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறி காரில் புறப்பட்டு சென்றார். செல்லும் போது செய்தியாளர்கள் சந்திப்பில், "ஜனநாயகத்திற்கு இங்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்று விட்டது" என்று தென்னரசு கூறினார்.