காங்கிரஸ் 62 தபால் வாக்குகளும், அதிமுக 35 தபால் வாக்குகளும் பெற்றுள்ளது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
ஈரோடு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் 27-ந் தேதி நடந்தது. இத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தது.
வெற்றியாளரைத் தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. 2 அறைகளில் 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.
காங்கிரஸ் 62 தபால் வாக்குகளும், அதிமுக 35 தபால் வாக்குகளும் பெற்றுள்ளது. அதன் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது