சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு நிலுவையில் உள்ள 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு நிலுவையில் உள்ள 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையிலுள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். குறிப்பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமுன்வடிவு, 2022-க்கு ஒப்புதல் வழங்கிட ஆளுநர் ஆர்.என்.ரவியை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார். அதோடு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு, 1983, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்டமுன்வடிவு, 2022, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டமுன்வடிவு 2022, உள்ளிட்ட 21 சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு ஆளுநரை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். ஆளுநருடனான இந்தச் சந்திப்பின் போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.