பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளும் வன்முறையை தூண்டி வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி விட்டதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வந்தார்.
இதனை தொடர்ந்து அவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளும் வன்முறையை தூண்டி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் காங்கிரஸ் கட்சி காந்தியின் வழியை பின்பற்றுவதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி, அகிம்சை வழியில் வன்முறையோடு போராடி வருவதாக தெரிவித்துள்ளார். பலவீனமானவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் தான் வன்முறை என அவர் விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு யாரைப் பற்றியும் நல்ல விதமான கருத்துக்களை பேசத் தெரியாது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். வெள்ளத்தால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, ஆளுங்கட்சி மக்களுக்காக என்ன செய்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.