மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து கூற ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் எம்.பிக்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பேரணியாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சென்றனர்.தொடர்ந்து, மக்களவை கூட்டம் பகல் 1.15 மணி அளவில் தேசிய கீதத்துடன் தொடங்கியது. பிரதமர் மோடி எம்.பி.க்களை வரவேற்று பேசினார்.
இதைத்தொடர்ந்து, மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா இன்றைய சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக மகளிர் இட ஒடக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து லோக்சபா நாளை காலை 11 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து கருத்து கூற காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “சரியான நேரம் வரும் வரை நான் இந்த விவகாரம் குறித்து கருத்து கூற மாட்டேன்”என்றார்.