'பர்வத்மாலா பரியோஜனா' திட்டத்தின் கீழ் மலைப்பாங்கான பகுதிகளை சமவெளிகளுடன் இணைக்கும் விதமாக கௌரிகுண்ட் மற்றும் கேதார்நாத் இடையே 9.7 கிமீ நீளமுள்ள ரோப்வே அமைக்கும் ரோப்வே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
உத்ரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவில் மற்றும் பத்ரிநாத் கோவில் ஆகியவை ஆன்மிக பக்தர்கள் கொண்டாடும் புனித தலங்களாகும். பத்ரிநாத்தில் இருக்கும் விஷ்ணு கோவிலுக்கும் கேதார்நாத்தில் இருக்கும் சிவாலயத்துக்கும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரையாக வருவார்கள். ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் கோவில்கள் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.
இந்த இடங்களுக்கு வரும் யாத்ரீகளின் வசதிக்காக ரோப்வே திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் ரோப்வே திட்டங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ’பர்வத்மாலா பரியோஜனா’ திட்டத்தின் மலைப்பாங்கான பகுதிகளை சமவெளிகளுடன் இணைக்கும் நோக்கத்தோடு இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இது இப்பகுதியின் சுற்றுலாவையும் மேம்படுத்தும். இந்தத் திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளில் 1,200-கிமீ நீளமுள்ள ரோப்வே நீளம் கொண்ட 250க்கும் மேற்பட்ட திட்டங்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதில் கௌரிகுண்ட் மற்றும் கேதார்நாத் இடையேயான ரோப்வே திட்டமும் அடங்கும்.
கெளரிகுண்ட் - கேதர்நாத் ரோப்வே திட்ட சிறப்பம்சங்கள் குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
கௌரிகுண்ட்-கேதார்நாத் திட்டம் உலகின் மிக நீளமான ரோப்வேகளில் ஒன்றாக உருவாக்கப்பட உள்ளது. 9.7 கிமீ நீளமுள்ள ரோப்வே அமைக்கும் இத்திட்டம் உத்தரகாண்டின் கௌரிகுண்ட் உடன் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத்தை இணைக்கும்.
தற்போது, இரண்டு இடங்களுக்கு இடையேயான பயணத்தை முடிக்க சுமார் 6-7 மணிநேரம் ஆகும் நிலையில், இந்த ரோப்வே திட்டம் நடைமுறைக்கு வரும் போது பயண நேரம் 28 நிமிடங்களாக குறையும்.
கடல் மட்டத்திலிருந்து 3,583 மீ உயரத்தில் இதற்கான ரோப்வே கட்டப்படும்
இதன் கட்டுமானத்தில் ட்ரை-கேபிள் பிரிக்கக்கூடிய கோண்டோலா (3S) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது
இதன்மூலம் ஒரு திசையில் ஒரு மணி நேரத்தில் மொத்தம் 3,600 பயணிகள் ரோப்வேயில் பயணம் செய்ய முடியும் உள்ளிட்ட தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.