இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது. இதையடுத்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய சில மணி நேரங்களிலேயே பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று அதனுடைய ஆய்வு பணியை தொடங்கியது.
அதை தொடர்ந்து லேண்டர் ரோவர் ஊர்ந்து செல்லும் காட்சியை படம்பிடித்து அனுப்பியிருந்ததை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து ரோவரும் லேண்டரை புகைப்படம் எடுத்து புவிக்கு அனுப்பும் என்று சொல்லப்பட்ட நிலையில் லேண்டரை, ரோவரும் படம்பிடித்து அனுப்பியிருந்தது. இந்த காட்சிகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்று பலரும் புகழ்ந்து பேசினர்.
இந்நிலையில் பிரக்யான் ரோவர் மீண்டும் லேண்டருக்குள் சென்று ஸ்லீப் மோட் நிலையில் உள்ளது. அதன் ஆய்வுப் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு உறக்க நிலைக்கு சென்றுள்ளது ரோவர். APXS மற்றும் LIBS பேலோடுகளில் இருந்து லேண்டர் வழியாக பூமிக்கு தரவுகள் அனுப்பப்படுகிறது. செப்டம்பர் 22ம் தேதி மீண்டும் சூரிய ஒளி வரும்போது ரோவர் விழித்தெழும் என்று இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.